ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும்
- Oct 20, 2023
- 1 min read
Updated: Oct 26, 2023

சில நாட்களுக்கு முன் சூதாட்டத்தினால் சிதைந்து போன ஒரு குடும்பத்தை பற்றி படிக்க நேர்ந்தது. அழகான குடும்பம், அன்பான மனைவி, இரண்டு குழந்தைகள்.
விதி விளையாடியது என்று தலைப்பிடப்பட்டிருந்தது. விதி அல்ல வினை.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
ஆகாத நட்பும், அதன் ஆதிக்கமும் ஒரு குடும்பத்தையே அசைத்து விட்டது.
ஒரு நிமிஷம் உங்களை சுற்றியிருக்கும் காரியங்களை சிந்தித்து பாருங்கள்.
உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இருப்போர் யார்?
யாரோடு நீங்கள் நெருங்கி பழகுகிறீர்கள்?
யாருடைய ஆலோசனைகளுக்கு செவிகொடுக்கிறீர்கள்?
யாருடைய நட்பு உங்களை influence செய்கிறது?
என்னுடைய பத்து நண்பர்கள் தண்ணியடிப்பார்கள், நான் கோக் குடித்து கம்பனி கொடுப்பேன் என்பவரானால், மற்ற ஒன்பது நண்பர்களின் தண்ணியின் பாதிப்பு நிச்சயமாய் உங்களில் ஆதிக்கம் செலுத்தாதா என்ன?
அல்லது நான் சூதாட மாட்டேன், ஆனால் சும்மா போரடித்தால் ஒன்லைன் போக்கர் எப்போதாவது விளையாடுவேன் என்றால், அந்த எப்போதோ ஒருநாளில் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். அதன் பின் வெற்றிக்களிப்பில் இன்னொரு நாள், போரடித்ததால் மற்றொரு நாள், விட்டதை பிடிக்க வேறொறு நாள், இப்படியே இவ்வரிசை நீண்டு கொண்டு போய், இழுக்கமுடியா தொலைவில் புதைமணலில் புதைத்துவிடும்.
தீமையை கண்டால் திரும்பி ஓடுங்கள்,
பால்யத்தின் இச்சைகளுக்கு பறந்து விலகுங்கள்,
துன்மார்கரோடு கையடித்து விளையாடாதீர்கள்,
துஷ்டரோடு பந்தியமராதீர்கள்,
பொய் உதடுகளும், கபட்டு வசனிப்பும் உள்ளோரோடு ஒட்டி உறவாடாதீர்கள்,
வஞ்சகரின் வலையில் அகப்படாதீர்கள்,
கூடா நட்பு கேடு விளைவிக்கும்.
நாலே நாலு நல்ல நண்பர்கள் போதும்,
அழும்போது அணைக்க சில அன்பர்கள் போதும்
ஆபத்தில் உதவ அறுவர் போதும்
சுற்றமும் நட்பும் அளவோடு போதும்.
ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும்.
சிந்தையை சீர்ப்படுத்துங்கள்
அகத்தை சுத்தப்படுத்துங்கள்
புத்தாண்டில் புதிதாக ஆரம்பியுங்கள்
களைகளை களைந்து போடுங்கள்
மூடருக்கு தோழனோ நாசமடைவான்.
துஷ்டரை கண்டால் தூர விலகுங்கள்.
உங்கள் அரணை காத்துக்கொள்ளுங்கள்.



Comments